search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதியுதவி திட்டம்"

    அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதற்கான பிரதம மந்திரி யின் கிசான் சம்மான் நிதி திட்டம் தொடங்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டதின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒரு விவசாய குடும்பத்திற்கு ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரம் மூன்று சம தவணைகளில் ஒரு தவணைக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் 2 ஹெக்டேர் வரை விவசாய நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் 90 ஆயிரத்து 500 விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஹெக்டேர் வரை விவசாய நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளிடமிருந்து இதுவரை 63 ஆயிரத்து 251 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகவல் பதிவேற்ற பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தினை அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரனும், கலெக்டர் விஜயலட்சுமியும் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு நிதி உதவி திட்டத்திற்கான ஆணைகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கு ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் முதல் தவணையாக 45 ஆயிரத்து 518 விவசாயிகளுக்கு, அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படவுள்ளது. மேலும், மீதமுள்ள விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜ், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பழனிசாமி, துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) அன்புராஜன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) நாகநாதன், கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்), வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தினை பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலையில் கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு நிதி உதவி திட்டத்திற்கான ஆணைகளை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் இளவரசன், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் துணை இயக்குனர் முருகன், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ராஜசேகரன், தோட்டக்கலை உதவி இயக்குனர் இந்திரா மற்றும் வேளாண் பொறியியல் துறையின் உதவி பொறியாளர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    தமிழக அரசு அறிவித்துள்ள ஏழைகளுக்கு ரூ.2,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை டாக்டர் ராமதாஸ் வரவேற்று உள்ளார். #Ramadoss #PMK
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கஜா புயலாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ள 60 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒருமுறை சிறப்பு நிதியுதவியாக ரூ.2,000 வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரவேற்கத்தக்கதாகும்.

    விவசாயத் தொழிலாளர்களில் தொடங்கி அனைத்துத் தொழிலாளர்களுக்கும் இந்த உதவி வழங்கப்படும். நகர்ப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட இருக்கிறது. அரசின் இந்த நிதியுதவி சரியான நேரத்தில் வழங்கப்படும் மிகத் தேவையான உதவியாகும்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில் வறட்சி நிலவுவதால் அங்கும் இதே நிலை தான் நிலவுகிறது.

    மேலும், சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு 103 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அவர்களுக்கு மாற்று வேலைக்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பொதுவாக இத்தகைய பாதிப்புகளின் தாக்கம் மற்ற துறைகளையும் பாதித்திருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு ஏதேனும் உதவி வழங்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும். அந்த வகையில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ.2,000 நிதியுதவி ஏழைக்குடும்பங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

    அதேநேரத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வறுமை என்பது இப்போது மட்டுமே நிகழும் ஒன்றல்ல. அவர்களை வறுமையிலிருந்து நிரந்தரமாக மீட்க வேண்டும் என்பதற்காகத் தான் வறுமைக்கோட்டுக்கும் கீழ் வாழும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.2,500 வழங்கும் வகையில் அடிப்படை வருமானத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 6-ந்தேதி பா.ம.க. வெளியிட்ட நிழல் பட்ஜெட்டில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

    அடிப்படை வருமானத் திட்டம் என்பது தமிழகத்திற்கு மிகவும் தேவையான திட்டம் ஆகும். அதற்கான தொடக்கமாக முதல்-அமைச்சர் இப்போது அறிவித்துள்ள ரூ.2,000 நிதியுதவித் திட்டத்தை நீட்டித்து, ஏழை குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இந்த நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் அது தமிழ்நாட்டின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் மிக முக்கிய மைல்கல்லாக அமையும்; இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக திகழும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Ramadoss #PMK
    ×